தங்கம் விலை குறையட்டும் வாங்கிக்கலாம்னு காத்துட்டு இருக்கீங்களா ! உங்களுக்கு தான் இந்த செய்தி!!
சென்னை: 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது . அதுவும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தங்கம் விலை நாம் எதிர்பாராத உச்சங்களை எல்லாம் எட்டி இருக்கிறது.
தங்கம் விலை: சாமானிய மக்களுக்கு இனி தங்கம் என்பது எட்டாக்கனி என்பதை நிரூபிக்கும் வகையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத பல உச்சங்களை எட்டிவிட்டது. தினமும் செய்திகளில் புதிய உச்சத்தில் தங்கம் என்பதை நாம் காணாமல் இல்லை. ஒரு பவுன் நகைக்கு ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வைக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது.
30 நாட்களில் நடந்தது என்ன: சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9,705 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்தது. அதாவது செப்டம்பர் மாதம் முதல் நாளில் தங்கம் ஒரு சவரன் 77,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இந்த 30 நாட்களில் அதாவது செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10,860 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 86,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எவ்வளவு உயர்வு: செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை ஏற்றத்தில் தான் இருந்திருக்கிறது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான இந்த 1 மாதத்தில் சென்னை ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 1155 ரூபாய் உயர்வு கண்டுள்ளது. அதே வேளையில் ஒரு சவரன் தங்கம் 9,240 ரூபாய் உயர்ந்துள்ளது.
காத்திருந்தவர்களுக்கு நஷ்டம்: ஒரே மாதத்தில் தங்கம் விலை கிராமுக்கு 1000 ரூபாய்க்கு மேலும் சவரனுக்கு 9000 ரூபாய்க்கு மேலும் உயர்ந்திருப்பது செப்டம்பரில் தங்கம் விலை உயர்வு எவ்வளவு உக்கிரமாக இருந்தது என்பதை நமக்கு உணர்த்தும். தங்கம் விலை குறையட்டும் என காத்திருந்தவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதியே ஒரு சவரன் நகையை வாங்கி இருந்தால் தற்போதைய விலையுடன் ஒப்பிட்டால் 9000 ரூபாய் வரை சேமித்திருக்கலாம்.
ஏன் உயர்வு: அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது , மேலும் இரண்டு வட்டி குறைப்பு நடவடிக்கைகள் இருக்கும் என வெளியிட்ட அறிவிப்பு, ட்ரம்பின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கைகளும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டன. இப்படி வரலாறு காணாத உயர்வை எட்டி வரக்கூடிய சூழலில் தங்கம் விலை குறையும் காத்திருந்து வாங்கலாம் என்ற எண்ணத்தை மக்கள் கைவிட்டு விட வேண்டும் என முதலீட்டு துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அக்டோபரில் என்ன நடக்கும்: ஏனெனில் அடுத்த வரும் மாதங்களிலும் தங்கத்தின் விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகமாக இருக்கின்றன என கூறுகின்றனர். ஒரு சிறிய சரிவு ஏற்பட்டால் கூட உடனடியாக தங்கத்தை வாங்கி வைத்து விடுங்கள் என்ற அறிவுரையை தான் நிபுணர்கள் வழங்குகின்றனர். நகை வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் நம்பகமான கடைகளில் நகை சீட்டு போட்டும், முதலீடு செய்ய விரும்புபவர்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களிலும் சிறுக சிறுக முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குகின்றனர்.
English summary Gold rate in Chennai peaks as in the September month alone increased more than 1000 rs per gram Gold rate in Chennai today peaked as one sovereign is now selling for Rs.86,880 in the September month alone, Gold rate has increased more than 1000 rs per gram and more than 9000 rs per sovereign.

Comments
Post a Comment